×

காஸ் ஏஜென்சிக்கு வந்து சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் காயம்: போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் லீமா காஸ் ஏஜென்சியில் ஆதார் பதிவு செய்துவிட்டு வீடு திரும்பியபோது ஆட்டோ கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் காயம் அடைந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரத் காஸ் நிறுவனத்தின் லீமா காஸ் ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இந்த காஸ் ஏஜென்சி மூலம் கும்மிடிப்பூண்டியில் உள்ள 61 ஊராட்சிகளை சேர்ந்த 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு காஸ் இணைப்பைப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு வருட காலமாக காஸ் இணைப்பைப் பெற்றவர்களுக்கு ஒன்றிய அரசின் மானியம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆதார் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என லீமா காஸ் ஏஜென்சி கூறியுள்ளது. இதனா‌ல் ஒன்றிய அரசின் மானியம் கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் சில நாட்களாக இந்த ஏஜென்சியில் ஆதார் விவரங்களை தர படையெடுத்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பூதூர் ஊராட்சியில் இருந்து நேற்றுமுன்தினம் சுமார் 10 பேர் ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு மேற்கண்ட லீமா காஸ் ஏஜென்சிக்கு காலை பதிவு செய்ய வந்துள்ளனர். 10 பேர் பதிவு செய்ய ஒரு நாள் முழுவதும் ஆகியது. பின்னர், மாலை அனைவரும் அதே ஆட்டோவில் வீடு திரும்பினார்.

அப்போது, பெத்திகுப்பத்திலிருந்து மாதர்பாக்கம் செல்லும் சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இதில் குறிப்பாக, ஈச்சங்காடு மேடு அருகே வந்தபோது ஆட்டோ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. அதில், வெண்ணிலா(36), நீலம்மாள்(48), மகி(37) ஆகிய மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் முதல் உதவி செய்யப்பட்டு சிறிய காயங்கள் என்பதால் இரண்டு மணி நேரத்தில் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், லீமா காஸ் ஏஜென்சி ஆதார் பதிவுக்காக நான்கு பகுதிகளாக பிரித்து இந்த பணிகளை மேற்கொண்டு இருந்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், 61 ஊராட்சிகளில் இருந்து ஒட்டுமொத்தமாக அவசரவாசமாக வரும் பொழுது இதுபோன்ற, விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரடியாக வந்து முக்கிய இடங்களில் இந்த ஆதார் பதிவினை ஏற்படுத்தி தர வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து கூறுகின்றனர்.

The post காஸ் ஏஜென்சிக்கு வந்து சென்றபோது ஆட்டோ கவிழ்ந்து மூன்று பெண்கள் காயம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Aadhaar ,Lima gas agency ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...